அரசகரும மொழிக் கொள்கையினை அமுல்படுத்தாத அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இதற்கமைய, அரச கரும மொழிகள் ஆணைக்குழு, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
தற்போதுள்ள சட்டத்திற்கமைய அரச மொழிக் கொள்கையினை அமுல்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக போதுமான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகியன அரச மொழிகளாக உள்ளன. பொதுமக்களுககு தேவையான கடமைகளை மேற்கொள்வதற்காக இரு மொழிகளையும் பயன்படுத்துமாறு நிறுவனங்களிடம் தெரிவித்தால் அதனை அவர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லாமல் எங்களின் அறிவுறுத்தல்களை நிராகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போதுள்ள சட்டத்திற்கிணங்க போதுமான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும். எனினும் தற்போது அவ்வாறான 600 அதிகாரிகளே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று அரச சேவையில் தமிழ் மொழிப் பாவனை மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இது சிறந்தது என நான் குறிப்பிடவில்லை. முன்னரை விட அதிக மேம்படுத்தல்கள் தேவை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.