"அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட மாகாணசபைகளுக்குள்ள அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் வசம் கையகப்படுத்திக்கொள்வதற்காக 'திவி நெகும' என்ற புதியதொரு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அத்துடன், அனைத்து அமைச்சுகளின் அதிகாரங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கைப்பற்றி அவற்றின் செயற்பாடுகளையும் முடக்குவதற்கு இந்த 'திவி நெகும' என்ற முத்திரையை ஒட்டிக் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கு மஹிந்த அரசு திட்டமிட்டுள்ளது.''
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்றுத் தெரிவித்தது.
'திவி நெகும' என்ற இந்தச் சட்டமூலத்தினூடாக சமுர்த்தி அதிகாரசபை சட்டமூலத்தை இல்லாது செய்து, 20 இலட்சம் குடும்பங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 900 கோடி ரூபா பணத்தையும் ஏப்பம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது எனக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, மஹிந்த அரசின் இந்த நடவடிக்கைகளைத் தமது கட்சி கடுமையாக எதிர்க்கின்றது எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"நாட்டு மக்களிடையே கருத்து வேற்றுமையை ஏற்படுத்தக்கூடிய "திவி நெகும' என்ற புதியதொரு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனூடாக நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுகளின் அதிகாரங்களையும் ஒரே அமைச்சின் வசம் கொண்டுவருவதற்கும் அது நடவடிக்கை எடுத்துவருகிறது.
மாகாணசபைக்குள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் ஓர் அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, சமுர்த்தி அதிகாரசபைச் சட்டமூலத்தை இல்லாது செய்வதுடன், மலையக, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபைகளையும் இல்லாது செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இப்படியானதொரு சட்டமூலம் எவருடைய தேவைக்காக மஹிந்த அரசால் கொண்டுவரப்படுகின்றது?
1995 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபை சட்டமூலம் கொண்டுவரப்பட்டு, 1997 ஆம் ஆண்டு அது புதிய வடிவில் மாற்றப்பட்டது. அரசின் பொறுப்பிலுள்ள இந்த சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அது எந்த உத்தரவாதத்தையும் வழங்காதுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் பணத்தைத் தமக்கேற்ற வகையில் செலவு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கின்றது.
இதனூடாக நாட்டிலுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற 900 கோடி ரூபா பணத்தையும் அரசு கைப்பற்ற நினைக்கின்றது. மஹிந்த அரசின் இந்தச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது சமுர்த்தி வங்கிக் கட்டமைப்புக்கு என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளில் தோல்வி ஏற்பட்டுள்ளது என நினைத்தா அரசு இவ்வாறாகத் திட்டமிட்டுள்ளது.
மலையகம், தெற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இவற்றுக்குச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் அரசு செய்து முடித்துவிட்டது என நினைத்தா மலையக, தெற்கு அபிவிருத்தி அதிகார சபைகளையும் அரசு நீக்கவுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுகளின் அதிகாரங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரும் அரசின் இந்த நடவடிக்கைகளினூடாக அனைத்துத் துறைசார்ந்த அமைச்சுகளின் அதிகாரங்களையும் இல்லாது செய்து அவற்றைப் பயனற்றதாக்குவதற்கு அரசு எண்ணுகின்றது.
இதனூடாக நாட்டின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கிராம அபிவிருத்தி உட்பட அனைத்து அமைச்சுகளும் ஒரே அமைச்சின் கீழ் செயற்படும். அமைச்சர்களின் அதிகாரங்களை இல்லாது செய்வது மட்டுமல்லாது, சமுர்த்திக் கொடுப்பனவுகளையும் இல்லாது செய்யும் நடவடிக்கைகளை சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையில் அரசு செயற்படுத்தி வருகின்றது.
மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களைப் பறித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்காக 'திவி நெகும' என்ற முத்திரை ஒட்டி மஹிந்த அரசால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தச் சட்டமூலத்தைத் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்" - என்றார்.