தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்பு அமைச்சராக. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்கை அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய சந்தித்துப் பேசியுள்ளார்.வொசிங்டனில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுவாக கட்டியெழுப்புவதற்கு உகந்த தருணம் இதுவே என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய சிறிலங்காவின் பாதுகாப்பு கவலைகள் குறித்தும், அண்மைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் விக்ரம்சிங்கிற்கு சிறிலங்கா தூதுவர், எடுத்துக் கூறியுள்ளார்.
பொதுவான பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு இருநாடுகளும் பங்காளிகளாக இணைந்து செயற்பட முடியும் என்று அமெரிக்காவின் பிரதி பாதுகாப்பு உதவிச்செயலர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத,கடற்கொள்ளை முறியடிப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள், உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் அவர் மேலும் கூறியதாகவும் வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.