ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா.) இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சியான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணரத்ன தெரிவித்தார்.
டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியது:
இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும். உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
சென்னையில் நடந்த டெசோ மாநாடு மக்களைத் திரட்டும் முயற்சி என்பதால் அதில் கலந்து கொண்டேன். இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.சிங்கள தேசியவாதம் என்று கூறி தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை இலங்கை அதிபர் ராஜபட்சவின் குடும்பத்தினர் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழர் மறுவாழ்வுக்காக ராஜபட்ச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைப் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் இப்போது டெசோ மாநாட்டுக்கு வந்துள்ளேன் என்றார் கருணரத்ன.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற டெசோ மாநாட்டில் பேசிய கருணரத்ன, தமிழர்களுக்கு ராஜபட்ச அரசு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அவருக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சிங்கள அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் தனது பயணத்தை தள்ளிவைத்துவிட்டு சென்னையிலேயே கருணரத்ன தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.