உலகில் வாழும் ஏனைய இன மக்கள் போல் நாமும் எமது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் சுயநிர்ணய அடிப்படையில் காணி காவற்துறை உட்பட்ட அதிகாரங்களோடு கூடிய ஆட்சி முறையில் எமது கல்வி பொருளாதாரம் மொழி கலை பண்பாடுகள் போன்றவற்றை நாமே கையாண்டு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே நாங்கள் கேட்கிறோம்..ஆனால் எமக்கு மகிந்த அரசு தர விரும்பும் மகிந்த சிந்தனை என்ற தீர்வு என்ன?.
சிறுபான்மையினர் என்று இலங்கையில் யாருமே இல்லை,சிறுபான்மையினர் என்று எவருமே இருக்காமல் அவர்கள் பெரும்பான்மையினரோடு கலந்து கரைந்து இலங்கை ஒரு சிங்களப் பவுத்த நாடாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் பிரச்சனையே இருக்காது என்பது தான் அவரது சிந்தனை,முடிவான தீர்வு.
அதை அவர் நிறைவேற்ற வேண்டுமானால் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கக் கூடாது, தமிழ் மொழி அல்லது அவர்களது மதங்கள் அரச மட்ட அங்கீகாரம் பெறக் கூடாது,எங்கும் சிங்கள மொழி பௌத்த மதம் கோலோச்ச வேண்டும்,அவற்றை எதிர்க்கும் தமிழர் நசுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்,அதை ஊக்குவிக்கக் கூடிய பொருளாதார பலம் தமிழருக்கு இருக்கக் கூடாது. மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் இவை மட்டும் தான் இன்று அதி முக்கியத்துவம் பெற்றுள்ளன.
காணி பறிப்பு சிங்களக் குடியேற்றம் சிங்களமொழி-பௌத்த மதத் திணிப்பு, தமிழர் பொருளாதார வர்த்தக வளங்களை பிடுங்கி சிங்களவருக்கு வழங்கல்,இராணுவ ஆட்சியால் தமிழரை அடக்கி ஒடுக்கல், இவற்றைத்தான் அதி உச்ச வேகத்தில் அவர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் மீண்டும் வலிமை பெற்று தன் திட்டத்தை தடுக்க முன் அதை நிறைவேற்றி விட வேண்டுமென்று துடிக்கிறார்.
அவருக்கு இடைஞ்சலாக இருப்பவர் யார்?.ஒன்று சிங்கள எதிர்க் கட்சிகள் அடுத்தது தமிழர் தரப்பு மூன்றாவது சர்வதேசம்.முதலிரண்டு பிரிவினரையும் ஒட்டுக் குழுக்கள் குண்டர்கள் மற்றும் முப்படைகளின் உதவியோடு தனது சர்வாதிகார ஆட்சியால் சமாளிக்கிறார். ஆனால் சர்வதேசம் தான் அவருக்கு இப்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது.இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும் சர்வதேச வல்லரசுகளின் பனிப்போர் இப்போது இலங்கையிலேயே மையம் கொண்ண்டுள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப்பாடு உலக வல்லாதிக்கத்தைத் தீர்மானிப்பதாகவும் இலங்கை அதன் மையப்புள்ளியாக இருப்பதாலும் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் நட்பு நாடாக வைத்திருப்பதில் வல்லரசுகள் முழுப் பலத்துடன் செயற் படுகின்றன.இலங்கை சீனச் சார்பாக இருப்பதால் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இலங்கைக்கு எதிராக பாவிக்க மேற்கு நாடுகளுக்கு கிடைத்துள்ள ஆயுதம் இலங்கை அரசு தமிழருக் கெதிராகச் செய்த செய்கின்ற அத்துமீறல்கள் தான். LLRC பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மூலம் மகிந்தவின் கழுத்தை நெரிக்கும் மேற்குலகை முற்றாகப் புறம் தள்ளி தனியச் சீன உதவியோடு மகிந்தவால் அதல பாதாளத்தில் விழும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தோடு முற்றாக அந்நியப்பட முடியாது.
அதனால் தமிழர் பிரச்சனைக்கு ஏதோ ஒரு தீர்வைக் கொடுத்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் காட்டி தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று மேற்குலகைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்தவுக்கு ஏற்ப்பட்டுள்ளது. அவர் என்ன தீர்வை இப்போது சிந்திக்கிறார்?. 13வது திருத்தத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களையும் பிடுங்கி வடக்கு கிழக்கையும் பிரித்து ஒன்றுமே இல்லாத மாகாண சபையைத் தான் தீர்வாகக் கொடுக்க விரும்புகிறார்.
நீதிமன்றத் தீர்ப்பின் படி அதை எல்லா மாகாண சபைகளையும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கான அவரது திட்டம்தான் மாகாணசபைத் தேர்தல்கள்.கிழக்கு மாகாண சபையை அரச சார்பான ஒன்றாக அமைத்து அங்கே வடகிழக்கு இணைப்பு வேண்டாம் காணி பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்ற தீர்மானங்களை எடுப்பித்து; 13 ம் திருத்தச் சட்டத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலையும் தனியாக நடத்தி தமிழ் மக்கள் அரசிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதே மகிந்தரின் திட்டமாகும்.
கிழக்குமாகாண சபையோடு சேர்த்து தான் சொன்னபடி காணி காவற்துறை அதிகாரம் வேண்டாம் என்று சொல்ல மறுத்த வடமத்திய மாகாண சபையையும், முரண்டுபண்ணும் சப்ரகமூவா மாகாணசபையையும் கலைத்து தேர்தலை நடத்துவதன் உள்நோக்கம் நீதிமன்ற ஆணைக்கிணங்க அனைத்து மாகாணசபைகளின் ஒப்புதலோடு 13 ம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரத்தை பிடுங்கியபின் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகும்.
அத்துடன் LLRC பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகவும் அதற்குத் திட்டம் தயார் எனவும் அதற்கு 3 வருடக் காலக் கெடு தேவை என்றும் கேட்டுள்ளார். அந்த 3 வருடத்துள் தான் நினைக்கும் சிங்களப் பவுத்த ஸ்ரீலங்காத் திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அவர் நம்புகிறார்.எனவே கிழக்கு மாகாணத் தேர்தலில் மகிந்த வென்றால் அதாவது கூட்டமைப்பு தோற்றால் தமிழரின் எதிர்காலம் சூனியமாகி விடும்.கிழக்கு மாகாணத் தேர்தல் எம்மை விழுங்க வருகின்ற பூதம் . தமிழினத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டு இன ஒழிப்பு முழுமை செய்யப்படும். தமிழினத்தின் வாழ்வா சாவா என்ற நிலையைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த கிழக்கு மாகாணத் தேர்தல் அமைவதால் இதை ஒரு சாதாரண மாகாண சபைத் தேர்தலாகப் பார்க்காமல் எமது உயிர்நாடியாகப் பார்த்து நாம் செயற்பட்டேயாக வேண்டும்.
இலங்கையில் சட்டமோ நீதிபரிபாலனமோ தேர்தல்களோ சுதந்திரமாக இயங்கும் நிலை அங்கு இல்லை. ஏதோ பெயரளவில் அவை நடக்கத் தான் செய்கின்றன. அவை அரசின் வசதிக்கும் நன்மைக்கும் ஆகவே நடத்தப்ப்படுவது வழமையே.அரசின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப நடைபெறும் தேர்தல்களுக்குள் எதிர்க் கட்சிகளும் செயற்பட்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம் உளளது. சென்ற வருடத்தின் முன்பே நடைபெற வேண்டிய வட மாகாண சபைத் தேர்தலை அரச வசதிக்கேற்ப நடத்த முடியாமையால் அதை நடத்தாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு தேர்தல் அடுத்த வருடம் நடைபெற வேண்டிய கிழக்கு மாகாண சபையை வேண்டுமென்றே கலைத்து விட்டு மகிந்த அங்கு தேர்தலை நடத்துகிறார். வேறுவழியின்றி எதிர்க் கட்சிகளும் அதில் பங்கு பற்றவேண்டிய நிர்ப்பந்தத்தில் த.தே.கூ.ம் அதில் போட்டியிடுகின்றது.
தமிழர் தரப்பிற்கும் சாதகமான பக்கங்களும் உள்ளன. முஸ்லிம் மக்களது பள்ளிவாசல்களும் அரச ஆதரவுப் பௌத்தர்களால் தாக்கப் படுவதாலும் அவர்களதும் காணிகளும் பறிக்கப் படுவதாலும் கணிசமான முஸ்லிம் மக்களும் அரசை எதிர்க்கிறார்கள்.அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.அதனால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த நான்கு முனைப் போட்டியில் தனிப் பெரும் கட்சியாக த.தே.கூ.வரக்கூடிய வாய்ப்பு நிட்சயம் என்பதால் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும்.ஆனால் அதற்கு தமிழர் நிறையவே செயற்பட வேண்டி உள்ளது. அவர்களிடம் குறிப்பாக நிதி வழம் இல்லை.
தமிழரில் பலர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கும் வசதி நிலைகூட இல்லாமல் தேர்தல் பற்றி நினைக்கவும் முடியாத நிலையில் உள்ளார்கள்.அவர்களுக்கு இத்தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்லி விளங்கப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும்.அங்கு ஆள்பலம் இருப்பினும் நிதிபலம் இன்மையால் இயங்க முடியாத நிலைதான் காணப்படுகிறது.
புலம் பெயர் தமிழராகிய நாம் எம்மாலான அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.மிகப் பெரும் ஆள், அம்பு, பண, படை பலம் உள்ள அரச தரப்போடு கூட்டமைப்பு மோத வேண்டி உள்ளது.அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து கொடுத்தால் அவர்களை நிட்சயம் பெரு வெற்றி பெறச் செய்யலாம். த.தே.கூ. கணிசமான ஆசனங்களைப் பெற்றால் பலமான தரப்பென்று முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரும்.தவறினால் UNP போன்ற சிறு கட்சி ஒன்றை இணைத்தே ஆட்சி அமைக்கலாம்.தமிழர் சார்பான ஆட்சி அமையக் கூடிய நிலையில் முஸ்லிம் காங்கிரசும் ஒத்துழைக்க முன்வரும்.
அதனால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை உருவாகும்.தொடர்ந்து வடமாகாண சபைத் தேர்தல் வந்தாலும் வலுவாக வெற்றி பெறலாம்.அதன் மூலம் மகிந்தவின் கனவுகளை நிர்மூலமாக்கலாம்.சர்வதேசத்திற்கும் பலமான ஒற்றுமையான தமிழரோடு சேர்ந்து மகிந்தவை வழிக்குக் கொண்டுவர வழி பிறக்கும். தமிழர் விடிவிற்கும் வழி பிறக்கும்.தமிழர் இப்போது தூங்கி விட்டால் கோட்டை விட்டால் பின்னர் எப்போதும் மீள முடியாது.தமிழர் சரித்திரத்தில் இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஒரு மிகப் பெரும் திருப்புமுனை. விழித்தெழுவோம். வேற்றுமை மறப்போம். விமர்சனம் தவிர்ப்போம். நமக்காகச் சிந்திக்காமல் நம் மக்களுக்காய்ச் சிந்திப்போம். பொது எதிரியை வெல்ல எம்பகையை மறப்போம்.உலகுக்கே உதாரணமாய்த் திகழ்வோம். சாதனை படைப்போம்.