'இன, மத, கலாசார வேறுபாடுகளுக்கு அப்பால் 'இலங்கையர்' என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்த அரசாங்கம் விரும்புகின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். '2009ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை நல்லிணக்கத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பவை மூலம் சாதித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியுள்ளது' என்றும் அவர் கூறினார்.இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. 'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டிலில் இன்று ஆரம்பமான இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவ தளபதி கூறுகையில்:
'இன்று பல நாடுகள், பிரதானமாக மேற்கு நாடுகள் தம்மால் முடியாமல் போனதை இலங்கை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறுகின்றன. ஆயினும் ஜனாதிபதியின் துரித செயலணி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்தலின் கீழ், இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதையும் வழமை நிலையை கொண்டுவருவதையும் 3 வருடங்களுக்குள் சாதித்துள்ளோம்.
தற்போது ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்கள், மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் என்பன அதற்காகப் பாடுபட்டோரின் அர்ப்பணிப்பாகும். ஆனால் இதை சர்வதேச சமூகம் அறிய முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் இந்த முன்னேற்றங்களைக் குறைத்துக் காட்டவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கவும் செயற்பட்டு வருகின்றார்கள். இராணுவம் தனது வழமையான கடமைக்கு அப்பால் மீள்குடியேறிய மக்களுக்காக செய்த நற்செயல்கள் வெளியில் தெரியாதுள்ளது' என்றார்.