சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு மிகவும் மோசமான நிலையிலேயே இருப்பதாக ஐ நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்புப் பணியகத்தின் செயற்திட்டப் பணிப்பாளர் ஜோன் கிங் (John Ging) தெரிவித்துள்ளார்.போர் முடிவுக்கு வந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரில் பார்வையிடச் சென்ற, அவர் தனது பயணத்தின் முடிவிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தனது மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் போது இவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியிருந்தார்.
அத்துடன் தெல்லிப்பழையில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்.
“பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது, சிறிலங்காவில் போருக்குப் பிந்திய காலகட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் 440,000 மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட போதிலும், அவர்கள் மோசமான நிலையில் – அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் போரினால் இடம்பெயர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தினால் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மேலதிகமான உதவிகள் தேவைப்படுகின்றன.
போரினால் வாழ்க்கையை இழந்த மக்கள் மீண்டும் கௌரவமாக வாழ்ந்து தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்புப் பணியகமும், ஏனைய அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளும் சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன.
வடக்கில் மக்கள் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் ஒரே வகையான அடிப்படை வசதிகளான, கழிப்பிடம், சுத்தமான குடிநீர், குடியிருப்பு, மின்சாரம், வாழ்வாதார உதவிகளையே அவர்கள் கேட்டனர்.
இத்தகைய சூழலில் மீளக்குடியமர்ந்தவர்கள் தமது தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைய முடியாது, அவர்கள் திருப்தி அடையக் கூடாது, நாமும் திருப்தி அடையக் கூடாது.
இந்த நிலை மாறி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்றால், கொடையாளி நாடுகள் தமது உதவிகள் மற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
வட மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவியில் 18.4 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.
அனைத்துலக நிதியுதவியில் 81.6 சதவீதம் குறைந்த நிலையில், அதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்தை தேவையில்லாமல் எதிர்கொள்கிறார்கள்.
எனினும் சிறிலங்கா அரசிடம் சில செயற்திட்டங்கள் இருக்கின்றன.
அவை நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.