கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களின் கைககளில்தான் அது தங்கியிருக்கின்றது என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, சிவன்கோவில் வீதி, தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகாமையில் நகரசபைத் தலைவர் த.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதன் கீழான அரசியல் தீர்வு தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என நாம் இந்திய அரசுக்கு எடுத்துச் சொன்னோம்.
ரஜீவ்காந்தி அதனை ஏற்றுக்கொண்டு இதனை ஆரம்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஓராண்டு காலம் செல்ல நாம் அதனைப் பூரணப்படுத்துவோம் எனக் கூறினார் எனவும் புளொட் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.