சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பாகிஸ்தானிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான தகவலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பாகிஸ்தானுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியா ருடே செய்தி வெளியிட்டிருந்தது.இதுபற்றிய தகவலை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் புதுடெல்லிக்கு அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொழும்பில் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்காவின் சக்தி மின்வலுத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருப்பதாவது.
சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பது குறித்தோ அல்லது அத்தகையதொரு திட்டம் குறித்த எந்தவொரு வெளிநாட்டுடன் கலந்துரையாடவோ இல்லை என்று கூறியுள்ளார்.
"சிறிலங்கா மின்சாரசபையும், இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்பூரில் அனல்மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது மட்டும் தான் உண்மை" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சு இதுபற்றிய எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.