கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர்களுமான தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்த கீதா அமெரிக்காவில் கல்வி கற்று பொறியியல் துறையில் உயர் கல்வி கற்று பொறியியல் கலாநிதிப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அமெரிக்காவின் "நாசா" அணு ஆராய்ச்சி நிலையத்தில் பொறியியல் விஞ்ஞானியாக சில ஆண்டுகள் பணியாற்றிய கீதாவை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அதிக சம்பளத்தை பேசிய அவரை தனது விஞ்ஞான ஆராச்சிப் பிரிவில் ஒரு பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் வாய்ப்பை இரு வருடங்களுக்கு முன்னர் வழங்கியது.
அமெரிக்காவில் ஒரு வான் பொறியியல் நிபுணராக பணியாற்றிய தனது தந்தையைப் போன்று பொறியியல் விஞ்ஞானத்துறையில் பணியாற்றிய கீதா பல கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டார். இந்த வகையில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு மின்சக்தியை வழங்கும் மிக நுட்பமான தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து அந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரிக்கப்படும் ஜி.எம் கார்களுக்கு பயன்படுத்தி தற்போது அந்த கார்களுக்கு மிகுந்த மதிப்பைப் பெற்றுத் தந்தமைக்காக ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் கீதாவை கனடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பருக்கும், ஒன்றாரியோ மாகாண முதல்வர் டால்ரன் மெக்குயின்றிக்கும் அறிமுகம் செய்யும் வகையில் அவர்கள் இருவரையும் தனது கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தது.
பிரதமரும் மாகாண முதல்வரும் கனடாவின் ஒஸ்சாவா நகரில் அமைந்திருக்கும் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகை தந்த போது அவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் கார்களின் மின்சாரத் தேவையை அதிக பொருட் செலவின்றி வழங்குவதற்குரிய தமது கண்டு பிடிப்பு பற்றி விளக்கமளித்தார். மேற்படி சந்திப்பின் போது கனடாவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான திரு கெவின் வில்லியம்ஸ் அவர்களும் அங்கு வருகை தந்திருந்தார்.
இங்கே காணப்படும் படங்களில் தமிழ் பேசும் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன் கனடாவின் பிரதமருக்கும், ஒன்றாரியோ மாகாண முதல்வருக்கும் புதிய தொழில் நுட்பம் தொடர்பாக விளக்கமளிப்பதைக் காணலாம்.